May 27, 2008

எண்ணம் எங்கும் செல்லும்


எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"
எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

--
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


குண்டலினி யோகம்

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

வேதாத்திரி மகரிஷி

May 26, 2008

குரு தானாக வருவார்

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.

ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.

மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).

நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்

அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.

வேதாத்திரி மகரிஷி


அகத்தவம் - தியானம்- Meditation

வேதாத்திரி மகரிசி மோன தவத்தில்
vethathiri maharishi in deep meditation
உயர்ந்த அகத்தவம்


நிறைந்த குருமூலம் நேர்முகமாய்க்
குண்டலினி யோகம் கற்று
நித்த தவம் ஆழ்ந்தாற்றி உண்மை
உணரப்பெற்றால் முனைப்பு போகும்

இறைவனது பகுதிநிலை உயிர்
மனமாய்த் தேர்ந்து அதன் உறைவிடமாம்
உடலதுவோ சமுதாயம் உற்பத்தி
செய்து பல பொருட்களீந்து

முறையாக வளர்துப் பண்பாட்டுடனே
கல்வி தொழில் காப்புதந்த
முழுக்கதையும் சிந்தனையின் முதிர்ச்சியினால்
உணர்ந்து வினைப் பதிவாய் பெற்ற

அகத்தவத்தின் பெருமை


அகத் தவத்தின் பொருள் கண்டு

அதன் பெருமை உணர்ந்திடுவீர்!

அகத் தவமோ உயிரினிலே

அறிவை ஒடுக்கும் பயிற்சி!

அகத் தவத்தால் மேலும் உயிர்

அம்மாகி மெய்ப்பொருளாம்!

அகத் தவத்தால் வீடுணர்ந்து

அமைதி பெற்று இன்புறலாம்



அகத் தவத்தால் ஐம்புஅனை அடக்கி

அறிவறிந் திடலாம்!

அகத் தவத்தால் அறு குண

ஆளுமைப் பேறடைந்திடலாம்!

அகத் தவத்தால் இல்லறத்தை

அன்பகமாய் ஆற்றிடலாம்!

அகத் தவத்தால் அனைத்துயிர்கள்

அருநட்பைப் பெற்றிடலாம்!

அகத் தவம் தீவினை யகற்றும்

அருள் நெறியை இயல்பாக்கும்!

அகத் தவமே இறைவழிபாடனைதிலும்

ஓர் சிறந்த முறை!

அகத் தவமே உயிர் வழிபாடதனை

விளக்கும் ஒளியாம்!

அகத் தவமே மதங்களெல்லாம்

அடைய விரும்பும் முடிவு!


யோகிராஜ் வேதாத்திரி மகரிசி

May 25, 2008

செயல் விளைவு தத்துவம் cause and effect வேதாத்திரி மகரிஷி

செயல் விளைவு தத்துவத்தை இறை நீதி என்று கருத்தில் கொள்ள வேண்டும். எங்கும் எல்லா பொருட்களாகவும், பொருட்களோடும் நிறைந்தியங்கும் எல்லா வகையான ஆற்றல்களாகவும் இயங்கிக் கொண்டிருப்பது அழுத்தம் எனும் எல்லையற்ற இறையாற்றலேதான். இறைவெளியாக் இருந்து கொண்டு தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலாக விளங்குவது தான் ஆதிசக்தியெனும் இறையாற்றலாகும்.

இவ்வாற்றல்தான் எந்த இடத்திலும் எந்த உருவத்திலும் அததற்கேற்ற இயக்கச் சீர்மையோடு செயலாற்றி வருகிறது. தோற்றப் பொருட்களில் இவ்வாற்றல் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்றிணைப்புச் சீர்மையாக இயங்குகின்றது. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் கை, கால், வாய், குதம், பால் குறி என்ற ஐந்து தொழில் கருவிகளும் அமைந்துள்ள மனிதனிடத்தில் இறைநிலை முதலாக மனித மனம் வரையில் நடைபெற்ற பரிணாம சீர்மையை உணர்ந்துகொள்ளும் மனமாக இறையாற்றல் முழுமை பெற்றுள் இயங்குகிறது.

ஆராய்ந்து தெளியுமிடத்து எல்லையற்ற அருட்பேராற்றலான இறையாற்றலேதான், தனது பரிணாமச்சிறப்பில் மன ஆற்றலாகவும் செயல்புரிகின்றது. ஆயினும் இறையாற்றலோ எல்லையற்ற இறைவெளியாக இருந்துகொண்டே அதனுள் அடங்கியுள்ள ஒவ்வொரு பொருளிலும் அதனதன் தன்மைக்கேற்பவும். அளவுக்கேற்பவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மன ஆற்றலோ சீவ இன உடலில் மையம் வைத்துக்கொண்டு எந்தப் பொருளோடு தொடர்பு கொள்கிறதோ அந்ததந்த அளவில் விரிந்தும், சுருங்கியும் எல்லை கட்டிக் கொண்டும் இயங்குறது. இறையாற்றல் பருமன், விரைவு, காலம், தொலைவு என்ற நான்கு கணக்குகளுக்கு உட்படாதது.

மன ஆற்றலோ எப்போதும் இறைநிலையை உணர்ந்து அதனோடு இணைந்திருக்கும் காலம் தவிர

  • பருமன்,
  • விரைவு,
  • காலம்,
  • தொலைவு

என்ற கணக்கில் தான் இயங்கி கொண்டிருக்கும். இதோடு மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பும் உண்டு. எப்பொருளை நினைத்தாலும், அதைப்போலவே வடிவத்தாலும், குணத்தாலும் தன் மாற்றம் பெறவல்லது அது.


கவி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்;

இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

பேரியக்க மண்டலம் முழுவதும் இறையாற்றலின் பரிணாம வடிவங்களும், இயக்கச் சிறப்புகளுமேயாகும். மன ஆற்றலோ இறையாற்றலின் விளைவுகளில் ஒரு சிறு பகுதியேதான். ஆயினும், மன ஆற்றலுக்கு ஒரு தனி மதிப்பும், சிறப்பும் உண்டு. இறையாற்றலின் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் எனும் மூன்று சிறப்புகளையும், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் நான்கு நிலைகளால் உணர்ந்து இரசிக்கவல்லது மனம். மேலும் இறையாற்றலின் சிறப்புகளை, விளைவுகளைத் தனது விருப்பத்திற்கேற்ப தனது உடற்கருவிகளின் ஆற்றலுக்குகுட்பட்டு இயக்க மாறறம் செய்து துய்க்கும் வல்லமையும் உண்டு.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மனம், இறையாற்றலின் இயக்கச் சீர்மையினை உணர்ந்து, அதற்கு முரண்படாத முறையிலே, தனது விளைவுகளைத் துய்க்கும் போது, மனம் ம்ற்றும் உடல் என்ற இரண்டுக்குமே பொருத்தமாய் அமையும் உண்ர்வுகள் உண்டாகும்.

மேலும்.

இறையாற்றலின் தன்மைகளையும், சிறப்புகளையும் அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயத்தால் தன் முனைப்பு கொண்டோ அளவு மீறியும், முறை மாறியும் மன ஆற்றல் செயல் புரியும் போது, அச்செயலுக்கேற்ப ஏற்படும் துல்லியமான விளைவுகள்தாம் செயல் விளைவு நீதி என்று வழங்கப்படுகிறது. சிறிதளவும் தவறாமலும் பிழையில்லாமலும், அன்பும் கருணையுமே இயல்பாக அமைந்துள்ள இறைநிலையானது சீவன்களிலிருந்து எழும் செயல்களுக்குத் தக்கபடி அளிக்கின்ற இவ்விளைவுதான் கூர்தலறம் என்று மொழி வழியே தமிழில் கூறப்படுகின்றது. இதுவேதான் இறைநீதியாகும்
கவி
தப்புக் கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கேற்றபடி
அப்போதைக்கப்போதே அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதையுணரார்.

வேதாத்திரி மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……

மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……

May 21, 2008

காயகற்பப் பயிற்சி – சித்தர்கள் Kayakapa payirchi - siddharkal வேதாத்திரி மகரிஷி.

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே
காயகற்பக் கலையாகும்.

இச்சை -- ஞானமும் வாழ்வும் -- அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்
இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும்
இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்
இச்சை ஒழித்திட ஏன் முயலுகின்றீர்கள்.

இச்சை என்பது தேவையுணர்வாகும்
இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும்
இச்சைச் செயலில் இணைந்திடும் மீறிடும்
இச்சைப் பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்.

இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி
இச்சித்தனுபவித்திச்சை இயல்பைப் பார்
இச்சையின் சக்தியை இச்சையில் சேமிக்க
இச்சை உயர்ந்திடும் இன்பம் பெருகிடும்

இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்டும்
இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும்
இச்சையின் முடிவில் இதே சிவம்
இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்

இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்ன?
இச்சை சுகதுக்கத்தபாலும் உள்ளதோ?
இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்
இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்

இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்
இச்சைக்குள்தானே இயங்குகிறது
இச்சை விரிந்திட ஐம்புலனே வழி
இச்சை அறிவென்ற பெயர் பெற்றதினாலே

இச்சை ஒலி, ஒளி போல் எழும் மாறிடும்
இச்சை வெளியோடு இணைந்து ஒன்றாகிவிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே

இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்

இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர்
இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும்
இச்சை எழும் போதே ஆய்வோர் அறிவார்கள்
இச்சை இச்சையாலும் திறன் காண்பார்

இச்சை வேகமே மீறிட மீறிட
இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப்பார்
இச்சை வேகமும் இயங்கும் வேகமும்
இச்சித்தறிந்திட இரண்டும் நீ அவ்விடம்

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்
இச்சையே காம முதலான அருகுணம்
இச்சையின்றேன் உயர் ஞான்ந்தான் ஏது?
இச்சையே நி நான் இவர் அவர் என்பதும்

இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை
இச்சை ரசிப்பது எண்ணுதல் அறிவாகும்
இச்சை பொருள் வரை இயங்க ஐயுணர்வாகும்
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்

இச்சையை புள்ளியாய் நிறுத்தப் பழகிடு
இச்சை விரிந்தால் ஆராய்ச்சியாக்கிடு
இச்சை விரிந்து பேராதார நிலையெய்த
இச்சைப் புலன்களை வென்று நிலை பெறும்

இச்சை முதல் படி * காமதேனு வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் என்பார்கள்
இச்சை உயர்நிலை சிந்தாமணி யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்

இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்
இச்சைச் சினமாக கவலையாய் நிலைமாறும்
இச்சையின் தோற்றமும் கவலையாய் நிலைமாறும்
இச்சை தோற்றமும் முடிவுமறிந்திடில்
இச்சையே எல்லை யற்ற பராபரம்.

*

  • காம + தேனு = ஆசைப் பசு
  • கற்பு + அகம் = கற்பகம்
  • சிந்தா + மணி = சிந்தை உறுதி

--அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி --

www.vethathiri.org